Description
“1922 ஆம் ஆண்டு வெளியான ஒரு புத்தகம் இப்போது உங்கள் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 98 ஆண்டுகள் கழித்து இந்தப் புத்தகம் இப்போது மறுபதிப்பு காண்கிறது. இன்றைக்கு இந்த மண்ணின் பூர்வ குடிகள் என அழைக்கப்படும் பெயர்களுள் முதன்மையானதாக இருப்பது தலித் என்கின்றன குறியீட்டுப் பெயர். இதற்கு முந்தைய குறியீட்டு பெயர்களைப் பற்றி ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம்தான் மண்ணின் மைந்தர்கள் யார் என்ற விவரமும், அவர்கள் எவ்வாறு தாழ்த்தப்பட்டார்கள், அல்லது தோற்கடிக்கப்பட்டார்கள் என்கின்ற வரலாறும் வாசிப்போருக்குப் புரியும்.
இந்த வரலாறு தெரியாத காரணத்தால் தான் தலித் மக்கள் தமக்கு உன்னதமான ஒரு வரலாறு இல்லை என்கின்ற எண்ணத்தில் தம்மைத் தாழ்ந்தவர்களாகவே கருதக் கூடிய அபாயம் நிலவிக் கொண்டிருக்கிறது. எப்போதும் சதாகாலமும் ஆதிக்கம் செய்து கொண்டே இருப்போம் என்று நினைக்கும் மனநோயாளிகளுக்கு மருந்தைத் தலித் மக்கள் கொடுத்து தெரிய வைக்கும் காலம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதைத் தொடங்கி வைத்தவர்களில் முதன்மையானவராகப் பண்டிதர் அயோத்திதாசர், ராவ் பகதூர் இரட்டைமலை சீனிவாசன், ராவ பகதூர் எம். சி. ராஜா உள்ளிட்ட பெரும் தலைவர்கள் எனலாம்.
இவர்களே முன்னோர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய தோழர்களாக, சமகாலத் தலைவர்களாக, அறிஞர்களாக இருந்தவர்கள் தலித் மக்களின் பன்னெடுங்கால வரலாற்றை ஆராய்ந்து வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். அப்படி கொண்டு வந்தவர்களில் ஒருவராகவும் எம்.சி. ராஜா அவர்களின் நம்பிக்கைக்குரிய சக அறிஞராகவும் இருந்தவர் இந்த நூலின் ஆசிரியர் திரிபுரம் ஆ. பெருமாள் பிள்ளை அவர்கள்.”