Description
“வருண பாகுபாடும் அதிலிருந்து கிளைத்த ஜாதியமும் கோலோச்சிய இந்திய சமூகத்தில், ஆங்கிலேயே ஆட்சியிலும் அதன் ஆதிக்கம் தொடர்ந்தது. அந்த நிர்வாக அமைப்பில் ஆதிக்க ஜாதியினர் பணியாளர்களாக சேர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். மன்னராட்சியிலும் இடம் மறுக்கப்பட்டோர் காலனியாட்சியிலும் அதே நிலைக்கு ஆளாயினர். மராட்டிய மாநிலத்தில் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மஹர்களும் சம்பர்களும் ஆங்கில இராணுவத்தில் சேர்ந்த பின்னர் கல்வியில் முன்னேற்றம் கண்டு சமூகத்தில் உயர் நிலை பெற்றனர்.
இது போன்ற முன்னேற்றம் ஏற்பட வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறைய ஆகியத் துறைகள் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோருக்கும் துணை நிற்கவில்லை. இதற்குக் காரணம் இத்துறைகளில் இவர்கள் உரிய அளவில் இடம் பெறாமல் போனதுதான். இதுவே இட ஒதுக்கீட்டின் அவசியத்தை சிந்திக்கத் தூண்டியது.
இடஒதுக்கீட்டிற்கான அயோத்திதாசரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவரது எழுத்துச் சான்றுகளின் துணையுடன் வெளிபடுத்துவதே இந்நூலின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. அவரது தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.
இடஒதுக்கீடு என்ற கொள்கையின் மூலவேர் எது? என்பதை ஆராயும் இந்நூலாசிரியர் இக்கொள்கை முன்வைக்கப்பட்ட காலத்தை, முதற்கட்டம் (1890 – 1900), இரண்டாவது காட்டம் (1905 – 1914) என இரண்டாகப் பகுத்துக் கொண்டுள்ளார். இப்பகுப்பில் முதற்கட்டம் அயோத்திதாசரை மையமாகக் கொண்டது. இரண்டாவது கட்டம் பிராமணர் அல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி என்ற இரு இயக்கங்களை மையமாகக் கொண்டது.”