Description
திராவிட இயக்கத் தந்தை டாக்டர். சி. நடேசன், சர். பி. தியாகராயர், டாக்டர். டி.எம். நாயர், தமிழ்வேள் பி.டி. இராசான், சிந்தனை சிற்பி சிங்காரவேலர், அஞ்சாநெஞ்சன் அழகிரி உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சுருக்கத்தை உணர்வு மேலிட காய்த்தல் உவத்தலின்றி திரு. ஏ. எஸ். வேணு எழுதியுள்ளார்.
கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களை மீட்டு இந்தியாவிற்கு தென்னகம் வழிகாட்டியாய் அன்றே விளங்கியுள்ளது. அதற்காக அத்தலைவர்கள் பட்ட பாட்டை மிக எளிமையான நடையில் சிறுநூலாக ஆக்கியுள்ளார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் நண்பர் ஏ.எஸ். வேணு அவர்கள் எழுதியுள்ள நூல்கள் இயக்கத்தின் துவக்க கால வளர்ச்சியை அறிவதற்கு பெரிதும் பயனுள்ளதாகத் திகழ்வன. திராவிட இயக்கத்தைப் பற்றி அயல் நாட்டவர் ஏதாவது எழுதினால், அதில் நண்பர் வேணு அவர்கள் தெரிவித்துள்ள விவரங்களும் தவறாமல் இடம் பெரும் என்கிற அளவிற்கு அவர் இயக்கத்தைப் பற்றி எழுதியுள்ளார். தந்தை பெரியார், அண்ணா ஆகியோருடன் இளமைக்காலம் தொட்டே தொடர்பு கொண்டு திராவிட இயக்க இதழ்கள் பலவற்றிலும் பணியாற்றி தனது எழுத்து திறமையை நிரூபித்திருப்பவர் நண்பர் வேணு.
– கலைஞர் மு. கருணாநிதி
நீதிக்கட்சிக் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்திற்கு அறிமுகமான, புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. ஏ. எஸ். வேணு, அறிஞர் அண்ணா அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர். தமிழிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு பல நல்ல படைப்புகளை இயக்கத்திற்கு அளித்தவர்.
– நாவலர். இரா. நெடுஞ்செழியன்
திராவிட இயக்கத்தின் தலைசிறந்த ஆங்கில, தமிழ் இருமொழி புலமை பெற்ற எழுத்தாளர்களில் அருமை நண்பர் ஏ. எஸ். வேணு அவர்கள் ஒரு முன்னணி எழுத்தாளர் ஆவார். பல வெளிநாட்டு அறிஞர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் பற்றி டாக்டர் பட்டப் படிப்புக்கான ஆய்வுகளுக்கு அறிஞர் திரு. ஏ. எஸ். வேணு அவர்கள் ஏற்கனவே எழுதிய நூலகள் – அதில் காணப்படும் குறிப்புகள் ஆகியவற்றை மேற்கோள்களாக பயன்படுத்துகின்றனர். அவருடைய சிறப்புக்கும் ஆற்றலுக்கும் இதுவே நல்ல சான்றாகும்.
– ஆசிரியர் கி. வீரமணி