Description
“பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில், மனித வாழ்கையின் நிலையற்ற ஓட்டத்தில், தன் இருப்பை மட்டுமே காத்துக் கொள்ளக்கூடிய பொதுவான மனவோட்டத்திலிருந்து விலகி நிற்கக் கூடியவர்கள் மட்டுமே மனித குலத்தின் மாண்பையும் அதன் ஆன்மிக நலன்களையும் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். இவர்களைக் கலகக்காரர்களாகவும் புரட்சியாளர்களாகவும் இந்தப் பொது மனம் அடையாளப்படுத்திக் கொள்கிறது.
பொது மனதிற்கும் கலக மனதிற்கும் இடையிலான போராட்டம்தான் மாபெரும் புரட்சிகளைத் தோற்றுவித்து உலகத்தின் வரலாறுகளைப் படைத்துள்ளது என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அந்த மாபெரும் புத்தன் தன்னுடைய கலக வாழ்க்கையை முன்னெடுக்காமல் போயிருந்தால் இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக ஆன்மிக நலன் எப்படி இருந்திருக்கும்?
தலித் மக்கள் தம்முடைய அரசியல் ஆற்றல் எப்படிப்பட்டது, எவ்வகைப்பட்டது என்பதனைப் பற்றி ஓரளவு உணர்ந்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் ஒருங்கிணைந்த ஆற்றலை திரளும் வாய்ப்புகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். இதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை கடுமையான இடையூறுக்கு உள்ளாவது தொடரத்தான் செய்கிறது.
எனவே தலித் அரசியலின் கருத்தியல் தளத்தில் பணியாற்றுபவர்கள் இன்னும் முனைப்பாகச் செயலாற்ற வேண்டியக் காலம் இது. தொடர்ந்து விடாப்பிடியான பங்களிப்புகல்தான் தலித் கருத்தியல் தளத்தையும், அரசியல் தளத்தையும் வலுவுள்ளவையாக்கும்.
சமூகத்தில் நிலவும் ஒடுக்கு முறைக்கு எதிரான கலகத்தின் ஊற்றுக்கண் மறைவான, அறிய முடியாத இடத்தில் எல்லாம் இருப்பதில்லை. அது எங்கும் நிறை ஆற்றலாக, மறைபொருளாக சிந்தனைகளில் இருந்து வருகிறது.”